Showing posts with label TamilNadu. Show all posts
Showing posts with label TamilNadu. Show all posts

Thursday, December 2, 2010


எங்கே போகிறோம் நாம்

– நன்றி தமிழருவி மணியன் மற்றும் ஜூனியர் விகடன்



அரிச்சந்திரன் விஸ்வாமித்திரனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியில்… தன்னுடைய அரசைத் துறந்தான்; காசி நகர் அடைந்து மனைவியையும், மகனையும் வேதியன் ஒருவனிடம் விலைக்கு விற்றான். தன்னை ஒரு புலையனிடம் ஒப்புக்கொடுத்து, அவனிடம் அடிமை ஊழியம் ஆற்றினான். உயிரைக் கொடுத்தாவது, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதே தன்னுடைய சுதர்மம் என்று அவன் உறுதிகொண்டிருந்ததாக… அரிச்சந்திர புராணம் உரைக் கிறது. கைகேயிக்குத் தந்த வாக்கைக் காப்பதற்கு தசரதன் தன் உயிரையே தாரை வார்த்தான் என்கிறது ராமாயண இதிகாசம். ஆனால், நம் அரசியல்வாதிகள் வகுத்துக் கொண்ட வாழ்நெறியே வேறல்லவா! அவர்களுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில், வாக்குறுதியை நினைத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது?


துரோணரும், துருபதனும் ஒரே குருகுலத்தில் ஒன்றாக வித்தை பயின்றபோது, இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு மலர்ந்தது. நட்பின் நெகிழ்ச்சியில் ஒருநாள், ‘நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் என் அரசில் பாதியை உனக்குப் பகிர்ந்தளிப்பேன்!’ என்று துரோணரிடம் வாக்களித்தான் துருபதன். காலம் அதன் கதியில் ஓடியது. துருபதன் பாஞ்சாலத்தின் அரசனாகப் பதவியேற்றான். துரோணரோ, தன் பிள்ளை அசுவத்தாமனுக்குப் பால் வாங்கவும் வழியின்றி வறுமையில் வாடினார். பழைய நட்பின் பாசத்தில் அவர் பாஞ்சாலம் சென்று துருபதனிடம் உதவி கேட்டார். ‘அரசனாகிய என்னை நீ எப்படி நண்பனாக நினைக்கலாம்? எந்த நட்பும் எல்லாக் காலமும் நீடிப்பதில்லை. கோழையோடு வீரனும், ஏழையோடு அரசனும் எப்படி நட்புக் கொள்ள முடியும்? என்றோ நான் அளித்த வாக்குறுதியை அன்றே மறக்காமல், இன்று வந்து என்முன் நிற்கும் உன்னைப் போன்ற முட்டாளை எங்கும் பார்க்க முடியாது!’ என்று பழித்து அவமானப்படுத்தினான் துருபதன். ஆட்சி நாற்காலியில் அமர்ந்ததும், அளித்த வாக்குறுதியை மறப்பது மகாபாரதக் காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது.


நாடு விடுதலை அடைந்ததும் பாலாறும் தேனாறும் தானாகப் பாய்ந்தோடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வாக்குறுதி வழங்கினர். சுதந்திரம் வந்து சேர்ந்து 62 ஆண்டுகள் ஆனபின்பும், ஏழைகள் இருக்கும் இடத்தில் பாலாறும் பாயவில்லை; தேனாறும் தென்படவில்லை. பள்ளம் தேடியே தண்ணீர் பாயும். ஆனால், நம் ஆட்சியாளர்களால் பயன் பெற்றவர்கள் மேட்டுக்குடி வர்க்கமே தவிர, பள்ளத்தில் இருக்கும் பாமர ஏழைகள் அன்று. இந்தியாவில் 600 கட்சிகளுக்கு மேல் இருக்கின்றன. நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தேசியக் கட்சிகள் என்ற தகுதியைப் பெறுகின்றன. தேர்தல் கமிஷனால் 9 கட்சிகள் தேசியக் கட்சிகளாகவும், 38 கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வழங்கிய வாக்குறுதிகளை எந்த வாக்காளரும் நினைவில் நிறுத்துவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், தேர்தல் அறிக்கைகளும் தேர்தல் நேரத்து வாக்குறுதிகளும் வெறும் சடங்குகளாகி விட்டதுதான்.


‘காங்கிரஸ் 1952 முதல் 2009 வரை ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் எத்தனை வாக்குறுதிகள் வழங்கியது… அவற்றுள் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன?’ என்று எந்த காங்கிரஸ் தலைவராவது சொல்லக் கூடுமா? தன்னுடைய தகர்ந்து போன அதிகாரக் கூட்டமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இந்திரா காந்தி 1971-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ‘வறுமையே வெளியேறு’ என்று போர்ப்பரணி பாடினார். இரண்டு தட்டுத் தட்டினால் இடம் பெயர்வதற்கு வறுமையென்ன எருமையா? இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற நேரு 17 ஆண்டுகளும், அவருடைய மகள் இந்திராகாந்தி 16 ஆண்டுகளும், இந்திராவின் மகன் ராஜீவ் 5 ஆண்டுகளும், சோனியாவின் வழிகாட்டுதலில் மன்மோகன் சிங் 5 ஆண்டுகளும் நாட்டின் உயர் பதவியில் அமர்ந்து ஆட்சி நடத்தினர். சோனியாவின் கண்ணசைவுக்கேற்ப காரியமாற்றும் பிரதமராக மன்மோகன் சிங் இன்றும் தொடர்கிறார். ஒரு குடும்பத்தின் ஆளுகையில் பாரததேசம் 43 ஆண்டுகளுக்கு மேல் ஆட்பட்டுக் கிடந்து என்ன பயன்? வறுமை முற்றாக வெளியேறியதா? இன்றும் எண்பது கோடி மக்களின் ஒருநாள் வருமானம் இருபது ரூபாய்க்கும் குறைவு என்றுதானே சென்குப்தா குழுவின் அறிக்கை அதிர்ச்சித் தகவல் தந்திருக்கிறது. அப்படியானால்… உலக மயமாக்கலும், தாராள மயமாக்கலும், தனியார் மயமாக்கலும் கொண்டு வந்த புதிய பொருளாதாரம் யாருக்குப் பயன் தருகிறது? சிதம்பரம் போன்றவர்கள் நிதியமைச்சர்களாக இருந் ததில் ஆதாயம் அடைந் தவர்கள் அம்பானிகளா? கூவம் நாற்றத்தில் குடிசைக்குள் வாழும் ஏழைக் குப்பன்களா?


தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வெறும் தேர்தல் கட்சி களாகத் தேய்ந்து போன பின்பு… வழங்கிய வாக்குறுதிகளுக்குப் பஞ்சமே இல்லை! நிறைவேற்றவே முடியாத வாக்குறுதியைத் தந்து வாக்காளர்களை ஏமாற்றிய முதல் அரசியல் குற்றவாளி அறிஞர் அண்ணா. 1967-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம்!’ என்று வாக்குறுதி வழங்கி அனைவரையும் வியப்பிலாழ்த்தினார் அண்ணா. ‘தவறினால் முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்!’ என்று ஆணித்தரமாக அவர் பேசிய பேச்சு, ஏதுமறியாப் பாமரர்களை ஏமாற்றியது. கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத அந்த வாக்குறுதி, மாலை நேரத்து மேடைப் பேச்சில் வந்து விழுந்தது. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டுக் காயக்கட்டுகளுடன் தோற்றம் தந்த எம்.ஜி.ஆர். சுவரொட்டியும், மாணவர்கள் 1965-ல் நடத்திய மொழிப் போராட்டமும், அண்ணாவின் மூன்றுபடி அரிசி வாக்குறுதியும்தான் தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தின. அண்ணா சொன்னபடி ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி போட முடியவில்லை. ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். ‘ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம், இரண்டு காளை மாடுகள் இலவசமாகத் தரப்படும்’ என்று வசனம் பேசியதையே வாக்குறுதியாக நம்பி, அவரை முதல்வராக்கிய ‘அறிவாளிகள்’ நாம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டவர்கள், தமிழுக்கு மத்திய அரசு செம்மொழித் தகுதியைத் தந்து விட்டதையே ‘மாநில சுயாட்சி’ பெற்றவர்கள் போல் பெருமை பொங்கப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு திராவிடக் கட்சிகளும் தேர்தல் உற்சவத்தின்போது வழங்கும் வாக்குறுதிகள் மக்கள் நலனைப் பெருக்குவதற்காக அன்று. ஜெயலலிதா ஆட்சி நாற்காலியில் அமர்ந்து விடக் கூடாது என்பதற்காக கலைஞரும், முதல்வர் பதவியிலிருந்து கலைஞரை இறக்கியாக வேண்டும் என்ற தவிப்பில் ஜெயலலிதாவும் போட்டி போட்டு வாக்குறுதிகளை வழங்குகின்றனர். இந்த வாக்குறுதிப் போட்டியில் அரசின் நிதிநிலை குறித்த அக்கறை இருவருக்குமே இல்லை.


திருச்செந்தூரிலும், வந்தவாசியிலும் இடைத் தேர்தல் வந்தது. தி.மு.கழகம் திருச்செந்தூரில் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று அழகிரி அறிவித்தார். அவர் எந்த இலக்கை நிர்ணயித்தாலும், அதை எளிதாக அடையும் வழி முறையை அவர் அறிவார். மகா பாரதத்தில் சகுனி சொன்னபடி சூதாட்டக் காய்கள் விழுவதைப் போன்று தேர்தல் களத்தில் அழகிரி அறிவித்தபடி வாக்குகள் வந்து விழும். ‘அழகிரி காய்ச்சலில் மூளை குழம்பிய முன்னாள்’ தமிழக நிதியமைச்சர் பொன்னையன் திருச்செந்தூர் சென்று, ‘அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு பவுன் தங்கம் ஐயாயிரம் ரூபாய்க்குத் தரப்படும்’ என்று திருவாய் மலர்ந்தார். தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம் இல்லை என்பதையும், சர்வதேசப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே தங்கத்தின் அன்றாட விலையைத் தீர்மானிக்கின்றன என்பதையும் நிதியமைச்சராக இருந்தவர் அறியாதவரா? மனச்சான்றை மறந்து மக்களை ஏமாற்றும் மலிவான வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகளை இனியும் நாம் நம்பி ஏமாறப் போகிறோமா?


கலைஞர் 2006- சட்டமன்றத் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றிவிட்டார் என்று புகழாரம்சூட்டப் படுகிறது. வாக்குறுதி வழங்கியபடி நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் உரிய வேகத்துடன் செயற் படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் இன்னொரு பக்கம் எழுப்பப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைகளுக்கான காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி, நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு அரசு தரிசு நிலம் வழங்கும் திட்டம் என்று பல நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், ஏழ்மையை முற்றாக அகற்றும் பொருளாதாரத் திட்டங்கள் ஒன்று கூட இந்த அரசிடம் இல்லை என்பதும் புறக்கணிக்க முடியாத உண்மை. பழுதாகிவிட்ட பகுதியில் பராமரிப்புப் பணியைச் செய்யாமல், பளபளப்புப் படுதா விரித்து மறைப்பதில் கலைஞரின் கைவண்ணம் ஈடிணையற்றது.


முறைகேடுகள் நடக்காத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை கால நடையில் பொய்த்து விட்டது. பணபலம், அடியாள் பலம், அதிகார பலம் ஆகிய மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித் தரும் என்றால், உண்மையான ஜனநாயகம் எப்படி உயிர் வாழும்? நியாயமான தேர்தல் நடக்கவில்லை என்று கலைஞர் அரசைக் குறை கூறும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படும் பீகார் அரசியலைப் பின்பற்றியது குறித்து வாய் திறப்பாரா? அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளை முற்றுகையிடும் போக்கை ஜெயலலிதாதான் முதலில் கும்மிடிப்பூண்டியிலும், காஞ்சிபுரத்திலும் அறிமுகப்படுத்தினார். தவறான அரசியலில் ஜெயலலிதா முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றால், கலைஞரும், அவருடைய சகாக்களும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என்பதுதானே பொய்மைக் கலப்பற்ற மெய்? கள்ளவாக்குப் போடுவதை ஒரு கலையாகவே கற்றுத் தேர்ந்தவர்கள் அல்லவா கழகக் கண்மணிகள்!


திருமங்கலம் பாணிதான் இனி எல்லா இடங்களிலும் பின்பற்றப்படுமெனில், நேர்மையும், உண்மையும் சார்ந்த சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க சாதாரண மனிதர்கள் தேர்தலில் எப்படி நிற்க முடியும்? அழகிரி உருவாக்கிய ‘திருமங்கலம் தேர்தல் முறை’ 1957-ல் காங்கிரஸ் அரசால் பின்பற்றப்பட்டிருந்தால்… அண்ணாவும், கலைஞரும், அன்பழகனும், நாவலரும் சட்டமன்றத்துக்குள்ளேயே நுழைந்திருக்க முடியாதே! அன்றைய தி.மு.க-வின் தலைவர்கள் அனைவரும் ஏழையும் பாழையுமாக இருந்த சாமானியர்கள்தானே! ’1957 தேர்தலில் தி.மு.கழகம் ஈடுபடும்போது, அதற்கிருந்த வசதிகள் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பணம்… அது பற்றி வாழ்க்கையிலேயே கவலைப்படாத தி.மு.கழகத் தோழர்கள் தேர்தலிலும் கவலைப்படவே இல்லை… ‘எதிர்த்துப் போட்டியிடுபவர்களின் பணபலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை விற்றேனும் அவசியமான செலவுகளைச் சரிக்கட்டித் தேர்தல் பணியாற்றுங்கள்’ என்பது அறிஞர் அண்ணா இட்ட கட்டளை. வாழ்க்கைப் பிரச்னைக்கே பணத்துக்காகத் திணறிக் கொண்டிருந்த கழகத் தோழர்கள், தேர்தல் பணிக்காகப் பணத்துக்கு அலைந்ததை என்னால் மறக்க முடியாது’ (கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் தொகுதி) என்று எழுதியிருக்கும் கலைஞரின் கழகம்தான் ‘திருமங்கலத் தேர்தல் திருவிழா’ நடத்தியது என்பது நம்மை அதிர வைக்கும் உண்மை அல்லவா! அண்ணா அன்று கழகத்தவரை ‘சாலையோரத்துச் சாமானியர்கள்’ என்று வருணித்தார். அந்த சாலையோரத்துச் சாமானியர்களில் பலர் இன்று அம்பானிக்கும், பிர்லாவுக்கும் போட்டியாளர்களாக வளர்ந்தது எப்படி?

‘என்னிடமிருந்த 1335 எண்ணுள்ள ஃபியட் கார், முரசொலி அலுவலகத்திலிருந்து ஒரு பழைய வேன், அச்சடிக்கப்பட்ட என்னுடைய வேண்டுகோள் அடங்கிய துண்டுத்தாள், ஒரு டேப்ரிக்கார்டர். இவைதான் சாதனங்கள்’ என்கிறார் ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர். இந்த சாதனங்களுடன் சென்று குளித்தலையில் 1957-ல் வெற்றிபெற்ற கலைஞர், இதே சாதனங்களுடன் ஒருவர் களத்தில் நின்று சட்டமன்றம் செல்லும் சூழலை இன்றில்லாமல் செய்து விட்டாரே! இந்தியாவிலேயே ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில்தான் ஒவ்வொரு தொகுதிக்கும் கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. இன்றுள்ள நிலையில் காமராஜரும், கக்கனும் வெற்றி பெறக்கூடுமா?


‘ஜனநாயகம் பிரபுக்கள் ஆட்சியை விடவும் கீழானது. ஏனெனில், சமத்துவம் என்ற பொய்யான யூகத்தை அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, திறமை எண்ணிக்கைக்கு பலியாகிறது. தந்திரங்களால்தான் எண்ணிக்கை இயக்கப்படுகின்றன. மக்கள் மிக எளிதில் திசை திரும்பக் கூடியவர்கள். கருத்தளவில் அவர்கள் திடபுத்தி இல்லாதவர்கள்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாடில் எழுதி வைத்ததற்கு இலக்கணமாக இந்திய ஜனநாயகம் இருக்கிறது. ‘ஒரேயரு அயோக்கியனை மக்கள் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம். ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்’ என்பது கண்ணதாசனின் கண்டுபிடிப்பு

Sunday, October 10, 2010

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


அயோத்தி தீர்ப்பை படிக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன், ஆனால் பல ஆயிரம் பக்கத்தில் இருக்கிறதாம். இதை டவுன்லோட் செய்வதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிடும், படிப்பது எப்போது? ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு…

டிஸ்க்ளைமர்: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!

ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்


நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.


கலை நிகழ்ச்சி:

நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.


முகத்திலே பரு

முளைக்காத சிறு உரு

ஆனாலும் கருவிலே திரு

அதற்கு காரணம் -

கலைஞர் என்ற கற்பகத் தரு

சளைக்காமல் போட்ட எரு!

உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -

என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!


இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.


கலைஞர் கேள்வி பதில்:

கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?


ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.


பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?


குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.


பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?


சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.


இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?


கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.


கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.


ஜெயலலிதா கருத்து:

இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.


விஜயகாந்த் பேட்டி:

இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.


ராமதாஸ் கருத்து:

கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.


சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:

இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.


துக்ளக் தலையங்கம்:

குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.


கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!


டி. ராஜேந்தர் பேட்டி:

வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.


ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:

சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!


அழகிரி குமுறல்:

என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.


கொசுறு செய்தி:

ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.

Wednesday, October 6, 2010

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்..

** ரஜினியை மீண்டும் வருங்கால முதல்வராக்க ஆரம்பித்து விடும் வாரமிருமுறை பத்திரிகைகள்.

** அவர் அப்படி அரசியலுக்கு எல்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு பாராட்டு விழா மஞ்சள் துண்டாருக்கு நடத்தி அதில் ரஜினியையும் கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்.

** அடுத்த படம் பற்றி பல ‘கதை’கள் வர ஆரம்பிக்கும்.

** ’வர்க்கமயமாக்கப்பட்ட சூழலில் எந்திரனின் மாசு ஏற்படுத்தியிருக்கும் தூசு’ என்கிற ரீதியில் தமிழ் வலையுலகில் ‘ஜெலூசில்’ புலம்பல்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும்.

** சன் பிக்சர்ஸின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ‘படத்தை புறக்கணியுங்கள்’ என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று எந்திரன் திரைப்படத்தை சோமாலியாவில் பெரும் தோல்விப்படமாக மாற்றிய ‘தோழர்’களுக்கு நன்றி என்று சில பதிவுகள் வரலாம்.

** படத்தில் கடைசி சீனில் வரும் அந்த விளம்பர பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம். 2015-ல் தலைவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!

** கூடிய விரைவில் ஒரு படத்தில் விவேக் ரோபோ மாதிரி வேஷமிட்டு அடி வாங்குவார்

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

** ஜப்பானியர்கள் ஏற்கனவே காமிக்ஸ் பிரியர்கள். இனிமேல் ‘ரோபோ’ காமிக்ஸ் அங்கே வர ஆரம்பித்து விடும்.

** எந்திரன் எப்படி என்று மக்கள் தீர்ப்பு கொடுத்தாகிவிட்டது. எனவே இனிமேலும் அதை ஆதரித்து எழுதினால் நம்மை எவன் கவனிப்பான் என்ற கவலை சில பிரபலங்களுக்கு. எனவே எதிர்மறை கட்டுரைகள் வர ஆரம்பிக்கும்.

** ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.

** சில வலைப்பதிவர்கள் எந்திரன் குறித்து ஒவ்வொரு சைட்டிலும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். ஒன்றில் வசி. இன்னொன்றில் சிட்டி வெர்ஷன் 1.0, மற்றொன்றில் சிட்டி வெர்ஷன் 2.0. (அந்நியன் ரெமோ உதாரணத்தை எவ்வளவு நாட்கள் தான் சொல்வதாம்?!) இன்னும் எவ்வளவு வெர்ஷன் போகுமோ தெரியவில்லை! (ஹரன்பிரசன்னாவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல!)

** சிட்டி ரஜினி ரயிலில் ஓடும் போது எச்சில் துப்புபவரின் மூஞ்சியில் எட்டி உதைக்கும் காட்சி ஷங்கர் மற்றும் ரஜினியின் பார்ப்பனியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்று ‘தோழர்’கள் எழுதப்போவதாகக் கேள்வி. வெற்றிலை, தாம்பூலம் போடும் சாஸ்திரிகளை காண்பித்து உதைக்கச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்பது தான் கேள்வியாம்!

** குப்பை படம், இந்த வார குட்டு, பரபரப்பு படம் என்று எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிப்பார்கள்.

நன்றி - மாயவரத்தான்

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!