Sunday, October 10, 2010

கீதையும் யோகமும்---ஜெயமோகன்

அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாடகமான எலிப்பொறி லண்டனில் பலவருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. சீட்டு விலை மிக அதிகம். இருந்தும் வெளிநாட்டினர்கூட வந்து பார்ப்பார்கள். பாரீஸில் இருந்து ஒருவர் வந்து அதைப்பார்ப்பதற்காக வாடகைக்காரில் சென்றார். சென்றிறங்கியதும் பயணக்கூலி சம்பந்தமாக சண்டை மூண்டது. பயணி சற்றும் விட்டுத்தரவில்லை. பின்னால் பிற வாடகை ஓட்டுநர்கள் வந்து ஒலியெழுப்ப ஆரம்பித்தனர்.

வேறு வழியில்லை. வாடகைக்காரர் காரை கிளப்பியபின் கூவினாராம் ‘கொலையைச்செய்தது அந்த மூன்றாவது வேலைக்காரன்!’ அவ்வளவுதான், நாடகம் அந்த பயணிக்கு ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு பெரியவர் கீதை உபந்நியாசம் செய்துகொண்டிருந்தார். கீதை சரணாகதியை உபதேசிக்கும் நூல் என்பது அவரது நம்பிக்கை. அது வைணவத்தின் அடிப்படை தரிசனமும்கூட. ‘சர்வ தர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ’ [அனைத்து தர்மங்களையும் கைவிடுக, என்னையே சரணடைக] என்ற வரியே கீதையின் மையம், உச்சம் என்று அவர் கண்ணீர் மல்கிச் சொன்னார்.

எனக்குத் தோன்றியது வேலைக்காரனின் ரகசியத்தை முன்னரே சொல்லிவிட்டு நாடகம் பார்ப்பது போல என்று. ஏனென்றால் அந்த வரிக்குச் சமானமான கருத்து கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்திலேயே வந்துவிடுகிறது. சரணாகதியை அப்போதே சொல்லிவிட்டார் கிருஷ்ணன். அதன்பின்னரும் 16 அத்தியாயங்களை எழுதி வைத்த அந்த ஆசிரியன் எத்தனை வடிவபோதமில்லாதவனாக இருக்கவேண்டும்!

உண்மையில் கீதை சரணாகதி நூலா? கீதையில் சரணாகதி சொல்லப்படுகிறதா என்றால் ஆம் என்றே சொல்வேன். அது கீதையின் செய்தி. அது கீதையின் ஆரம்பத்திலேயே வந்து விடுகிறது. ஆயினும் கீதை மேலே செல்கிறது. அப்படியானால் அது சரணாகதியைப்பற்றி மட்டுமே பேசக்கூடிய நூல் அல்ல. சரணாகதிக்கும் மேலாக பலவற்றை அது சொல்கிறது. சாங்கியயோகத்துக்குப் பின்னர்தான் கர்மயோகமும் ஞானயோகமும் எல்லாம் வருகின்றன.

அப்படியானால் மேற்கொண்டு சொல்லப்படும் விஷயங்கள் சரணாகதிக்கு வலுச்சேர்க்கும் விதமாகச் சொல்லப்படுகின்றனவா? சரணாகதியை விளக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ அவை சொல்லப்படுகின்றனவா? மேற்கொண்டு சொல்லப்படுவனவற்றுக்கு சரணாகதி முதல் படியோ முன்நிபந்தனையோ ஆக உள்ளதா?

கீதையை ஆராயும்போது அப்படித் தோன்றுவதில்லை. கீதையின் அந்த வரியையை கவனியுங்கள். ‘சகல தர்மங்களையும் கைவிடுக’ அனைத்து தீமைகளையும் என்று சொல்லவில்லை. அனைத்து ஆசைகளையும் என்று சொல்லவில்லை. அனைத்து தர்மங்களையும் கைவிடுக என்று சொல்கிறது. இங்கே தர்மம் என்னும்போது செய்யக்கூடுவது என்றே பொருள். செய்யக்கூடுவது அனைத்தையும் கைவிட்டு அவனைமட்டுமே சரணடைக. அதுவே சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லும் பரிபூரண சரணாகதி

அவ்வாறு பரிபூரணமாக சரணாகதி அடைந்தவனுக்கு எதற்கு கர்மம், எதற்கு ஞானம், எதற்கு மேலே சொல்லப்படும் அத்தனை யோகங்கள்? அவற்றை சரணாகதியின் அடுத்தபடிகளாகச் சொல்லவில்லை கிருஷ்ணன். சரணாகதிக்கு பதிலாகவே சொல்கிறான். ஆம் சரணாகதி மட்டும் போதாதவர்களுக்காகச் சொல்லப்படுகின்றன அவை.

கீதையைச் சொல்லிமுடித்த கீதாசாரியன் இந்த கருத்துக்களைப்பற்றி நீயே சிந்தித்து உரிய முடிவை எடு என்றே அர்ச்சுனனுக்குச் சொல்கிறான். இவை கடவுளின் சொற்கள், அப்படியே கண்ணைமூடிக்கொண்டு கடைப்பிடி என்று சொல்லவில்லை. அதாவது சரணாகதி ஆரம்பத்தில் தான் சொல்லப்படுகிறது. கடைசியில் ஆய்வுநோக்கும் நுண்ணிய சுய பரிசீலனையுமே முன்வைக்கப்படுகிறது.

கீதையை புறவயமாக ஆராய்ந்த வரலாற்றாசிரியரான டி டி கோஸாம்பி அது ஒரு மாபெரும் இலக்கியத்திருட்டு என்று சொல்கிறார். பல்வேறு நூல்களில் இருந்து பலகாலகட்டங்களில் எடுத்து தொகுக்கப்பட்ட சிந்தனைகளின் தொகைதான் அது என்பதே அவரது எண்ணம். இந்திய மார்க்ஸிய தத்துவசிந்தனையாளர்களில் முன்னோடியான எம்.என்.ராய் கீதை தான் சொன்னதையே மறுத்து செல்லும் முரண்பாடுகளின் மூட்டை என்கிறார். தத்துவ முரண்பாடுகளை அற்புதமான கவித்துவம் மூலம் தொடுத்துத்தரும் பேரிலக்கியம் அது என்பது இன்னொரு மார்க்ஸிய சிந்தனையாளரான கெ.தாமோதரனின் வாதம்.

கீதையைப் போன்ற ஒரு மூலதத்துவ நூலை எவரெவரோ எப்படி எப்படியோ வாசிக்கிறார்கள். அதை ஒன்றும் செய்யவும் முடியாது. ஒரு சர்தார்ஜி நகைச்சுவை உண்டு. சர்தார்ஜி கீதை உரைகேட்க தவறுதலாக வந்தமர்ந்தார். ரொம்பநேரம் ஒன்றுமே புரியவில்லை. ஒரு வரி வந்தது, அதில் ‘…கர்மஜா’ என்ற சொல் காதில் விழுந்ததுமே சர்தார்ஜி ‘வாஹ் வாஹ்’ என்றார். மகிழ்ந்து தலையை ஆட்டினார்.

பிறருக்கு எதுவும் புரியவில்லை. சரி சர்தார்ஜிக்கு எதுவோ பிடிகிடைத்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் சர்தார்ஜியை வழியில் சந்தித்து கேட்டார் ‘சர்தார்ஜி கீதையை கேட்டு ஏன் மகிழ்ச்சி அடைந்தீர்கள்?’. சர்தார்ஜி சொன்னார் ‘அச்சா கீதை…அச்சா’ கேட்டவருக்கு புரியவில்லை என்ன அப்படி அதிலே அவ்வளவு மகிழ்ச்சி அடையும்படி? சர்தார்ஜி சொன்னார் ‘அது சொல்கிறதே கர் மஜா என்று [மஜாவாக இருங்கள்] அது எனக்கு பிடித்திருக்கிரது. நான் நேராக அதற்குத்தான் செல்கிறேன்’

நான் மேலே சொன்ன அறிஞர்களின் சிக்கல் என்னவென்றால் அவர்கள் கீதையை அதன் தத்துவ விவாதத்தளத்தில் வைத்து வாசிக்க வில்லை. அது உருவான காலகட்டத்தின் தத்துவச் சொற்களையும் அது எதிர்கொண்டு பேசும் அறிவுச்சூழலையும் கருத்தில்கொண்டு அதை பொருள்கொள்ள முயலவில்லை. அவர்களுக்கு அவர்களின் மார்க்சியமதநம்பிக்கை சார்ந்து அதை நிராகரித்தாகவேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆம், மார்க்ஸியமும் ஒரு மதமே. அதை நம்புபவர்களும் எதைச்சிந்திக்கவேண்டும் என்றும் எங்கே வந்து சேர்ந்தாகவேண்டும் என்றும் ஏற்கனவே அவர்களின் தீர்க்கதரிசியால் அவர்களின் மூலநூலில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கீதையில் முரண்பாடுகள் உள்ளனவா? ஆம், அதை பொதுவாக வாசிக்கும் எவரும் முதலில் காண்பது அந்த முரண்பாடுகளை மட்டுமே. சாங்கிய யோகத்தில் கிருஷ்ணன் ஒரு சராசரி ஷத்திரியனுக்குரிய வாழ்க்கை இலட்சியத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். போர்புரிந்தால் உனக்கு செல்வமும் நாடும் அதிகாரமும் புகழும் கிடைக்கும், மேலும் உன் குலதர்மமும் அதுவே, அதைச்செய் என்கிறான். ஆனால் அடுத்த அத்தியாயத்திலேயே உலகியல்நோக்கை வேருடன் வெட்டி வீசும்படிச் சொல்கிறது கீதை. அடுத்த அத்தியாயத்தில் பயன்கருதாமல் செயலாற்று என்கிறது.

கீதை முழுக்க வரும் இந்த முரண்பாடுகளை அதை பக்திநோக்கில் விளக்குபவர்கள் தெளிவுபடுத்துவதில்லை. அது பகவானின் பேச்சு அதை அப்படியே எடுத்துக்கொள் என்று சொல்கிறார்கள். என்னிடம் பகவானின் பேச்சை எதற்கு ஆராயவேண்டுமென்று கேட்டவர்கள் பலர். அவர்களில் சிலர் அடுத்தபடிக்கே சென்று கீதையை வாசிப்பதே இல்லை. பூஜையறையில் ஒரு பெரிய தட்டில் வைத்து தினம் வழிபடுவதுடன் சரி. சிலர் குட்டி கீதையை கழுத்தில் மாலையில் பதக்கமாக அணிவதும் உண்டு. நான் கேட்டேன், எதற்கு கீதை என்ற நூல்? ஒரு தாளில் கீதை என்று எழுதி வைத்தாலே போதுமே.

இன்னொரு பக்கம் கீதை இன்று கைதவறி விழுந்த கண்ணாடிப்பாத்திரம் மாதிரி துண்டு துண்டாக கிடக்கிறது நம் மதநம்பிக்கைகளில். முன்பு ஒரு பெண் எல்லாரும் ரொம்பச் சொல்கிரார்களே என்று ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை நூலகத்தில் இருந்து எடுத்தாள். அதை வாசிக்க முயன்றபின் நூலகத்திற்கே திருப்பிக்கொண்டு வந்து கொடுத்துவிட்டாள். ‘நாடகம் சுகமில்லை, ஒரே மேற்கோள்மழை’ என்றாள். மொத்த ஷேக்ஸ்பியர் வரிகளையும் மேற்கோள் காட்டிவிட்டார்கள். கீதையையும் ஒரு மாபெரும் மேற்கோள் தொகுப்பாக மாற்றிவிட்டார்கள்.

உதிரி வரிகளாக கீதையை அறிவது கீதையின் முரண்பாடுகளுக்கே அழைத்துச் செல்லும். ஒரு மேற்கோளில் ஒன்றைச்சொல்லும் கிருஷ்ணன் இன்னோன்றில் நேர் எதிராகச் சொன்னால் என்ன செய்வது? அதற்கும் ஒரு பௌராணிகர் வழி கண்டுபிடித்தார். இது கிருஷ்ணன் சத்யபாமையிடம் சொன்னது அது ருக்மிணியிடம் சொன்னது இன்னொன்று ராதையிடம் சொன்னது. ‘ஒத்தராண்டை சொன்னதை மத்தவாள்ட்ட சொல்லப்படாது. அவன் கள்ளக்கிருஷ்ணனோல்லியோ’

கீதையை ஒரு உரையாக, ஒரு அறிவுரைக்கொத்தாக, ஒரு வழிகாட்டுநெறிநூலாக வாசிக்கப்போனால் அந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ளவே முடியாது. அதை ஓர் உரையாடலாக, ஒரு விவாதமாக புரிந்துகொண்டால் மட்டுமே அந்த முரண்பாடுகளை புரிந்துகொள்ள முடியும். அதில் உள்ளது விவாதத்தின் முரணியக்கம்.[dialectics ] முரணியக்கம் என்ற அறிவியங்கியல் முறைக்கும் இந்திய ஞான மரபில் யோகாத்ம மார்க்கம் என்று பெயர்.

கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் முந்தைய அத்தியாயத்தின் மறுப்புதான்.முந்தைய அத்தியாயத்தின் விவாதத்தின் இயல்பான நீட்சியும்கூட. முதலில் கிருஷ்ணன் எந்த சத்ரியனுக்கும் சொல்லவேண்டிய நேரடியான எளிய வாழ்க்கை இலட்சியத்தை சாங்கியயோகத்தில் சொல்கிறான். ஆனால் அர்ஜுனன் தன் வினாக்கள் மூலம் அவனுக்கு அந்த விடைகள் போதவில்லை என்பதை தெரிவிக்கிறான். ஆகவே முதலில் சொன்னதை மறுத்து அல்லது தாண்டிச்சென்று பிறிதொரு இலட்சியத்தை கீதை சொல்கிறது. அதிலும் அர்ஜுனன் நிறைவுறாதபோது கீதை வேறு ஒரு வழியை திறந்து காட்டுகிறது.

ஆனால் இந்த ஒவ்வொரு படியும் ஒன்றை விட இன்னொன்று மேலானது என்று பொருளல்ல. சாங்கிய யோகத்தை விட கர்மயோகமும் கர்மயோகத்தை விட ஞானயோகமும் மேலானவை அல்ல. அவை அனைத்தும் சமமே. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்குரியவை. உதாரணமாகச் சொல்லப்போனால் ஒரு கண் மருத்துவர் நம் கண்ணில் வேறு வேறு கண்ணாடிகளை வைத்து பார்த்து நமக்குரியதை தேர்வுசெய்வது போலத்தான் கீதையில் கிருஷ்ணன் செயல்படுகிறான். ஒவ்வொன்றாகச் சொல்லி அர்ஜுனன் அதைத்தாண்டிச் செல்லும்போது இன்னொன்றை முன்வைக்கிறான்.

கீதை ஓர் இலக்கியம். ஆகவே ஒரு அபாரமான நாடகத்தருணத்தை அது தன் விவாதத்தை நிகழ்த்த தேர்ந்தெடுத்துள்ளது. அந்த நாடக உச்சம் வழியாக அதன் தத்துவம் பலபடிகளாக முன்வைக்கப்படுகிரது. ஒரு உதாரணம், ஒரு சிறுவனை ஒரு துறவி தெருவில் சந்திக்கிறார். அவன் வீட்டை விட்டு வந்துவிட்டான். ‘தம்பி நீ ஊருக்கு போ. அம்மா அப்பாவை வருத்தப்பட செய்யாதே. பெற்றோர் சொல்லுக்கு அடங்கி நடக்கவேண்டும், அதுதான் நல்ல குழந்தைகளின் கடமை’ என்று அறிவுரை சொல்கிறார்.

ஆனால் பையன் அதைக் கேட்கவில்லை. அவன் அவரிடம் ஆழமான கேள்விகளைக் கேட்கிறான். அவர் உடனே ‘சரிதான் உனக்கு குடும்பம் தேவை இல்லை. பெற்றோரின் வழிகாட்டல் உனக்கு உதவாது. நீ அந்த கட்டத்தைக் கடந்துவிட்டாய். உனக்கு இப்போது தேவை நல்ல ஓரு ஆசிரியர். பக்கத்து ஊரில் ஒரு நல்ல ஆசிரியர் இருக்கிறார். அவரிடம் செல். சேவைசெய்து கல்வியைக் கற்றுக்கொள்’ என்கிறார்

ஆனால் பையன் மேலும் கேட்கிறான். அவர் அவனை நுட்பமாக புரிந்துகொண்டு ‘ஆம், உனக்கு சாதாரணமான ஒரு ஆசிரியன் போதாது. அவர்கள் உனக்கு மொழியை மட்டுமே கற்றுத்தருவார்கள். நீ காஞ்சிக்குப் போ. அங்கே ஒரு பேரறிஞர் இருக்கிறார். நீ அவரிடம் சென்று கற்றுக்கொள்’ என்கிறார்.

அவன் மேலும் உரையாடவே அவர் இன்னும் அவனை புரிந்துகொண்டு ‘நீ கற்கவேண்டியது என ஏதும் இனி இல்லை. கல்வி உனக்கு இனி சுமையாகவே ஆகும். நீ உணரவேண்டியவையே உள்ளன. என்னுடன் என் சீடனாக வா’ என்கிறார்.

இங்கே அவர் சொன்ன ஒவ்வொரு படியும் ஒன்றை ஒன்று மறுப்பவை. அவர் சொல்லும் வழிமுறைகளை மட்டும் தனியாக எடுத்து பார்த்தால் முரண்பாடுகளே மிஞ்சும். ஆனால் அவை அச்சீடனுடனுடனான உரையாடல் என்று புரிந்துகொண்டால் அந்த முரண்கள் முரண்களல்ல படிகள் என்று தெரியும்.

இதுவே கீதையின் முரணியக்கம். இந்த முரணியக்கத்தை கீதை யோகம் என்கிறது. முரணியக்க அணுகுமுறை வேதாந்தத்தின் அடிப்படை. அதற்கு யோகாத்ம மார்க்கம் என்று பெயர். கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் யோகம் என்று முடிவது இதனால்தான். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் யோகசாஸ்திரமாகிய கீதையின் அத்தியாயம் அது என்ற தொகுப்பு வரி வருவதைக் கவனிக்கலாம்.

நெடுங்காலமாகவே அத்வைத குருகுலங்களில் இந்த முரணியக்க அணுகுமுறையே பயிலப்பட்டு வந்தது. நாராயண குரு அந்த முறையை தன் ஆசிரியர்களிடமிருந்து கற்றார். அதை நடராஜகுருவுக்கு கற்பித்தார். நடராஜகுருவின் கீதையுரை அந்த நோக்கில் எழுதபப்ட்ட ஒரு மாபெரும் நூல்.கீதை உரைகளில் அது ஒரு கிளாசிக். பிற்பாடு சின்மயானந்தர் போன்றவர்கள் அந்நூலையே முன்னுதாரணமாகக் கொண்டார்கள் என்பதை எளிதில் காணலாம்.

கீதையை ஒற்றைப்படை உபதேச நூலாகக்கண்டவர்கள் அந்நூலை குருகுல அமைப்பு இல்லாமல் கற்ற மேலை நாட்டு அறிஞர்களே. அதேபோல அதன் யோக முறையை வெறும் நல்லுரையாக காணும்போக்கு முறையான தத்துவ- குருகுல கல்வி இல்லாத பக்தர்களிடமும் காணப்படுகிறது. கீதையை பல வகையான தவறான, குறைபாடான புரிதல்களுடன் அறிய வழிவகுக்கும் போக்கு இது

சாமானிய வாசிப்பில் யோகம் என்ற சொல் பலவகையான பொருட்குழப்பங்களை உருவாக்குகிறது. இந்திய சிந்தனைமரபில் யோகம் என்பது பல்வேறு பொருளில் வரக்கூடிய ஒரு சொல்லாகும். யுஜ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது அது. இணைதல் ஒன்றுகூடுதல் என்ற பொருள் அதற்குண்டு

வேதங்களில் யோகம் என்பது கூடுகை, கூட்டம்,சபை என்ற பொருளில்தான் பெரும்பாலும் பயின்று வருகிறது. பின்னர் இறைவனுடன் அல்லது பிரம்மத்துடன் ஒன்றாக இணைவதைச் சொல்லக்கூடிய வார்த்தையாக அது வேதாந்த மரபுகளில் பயன்படுத்தப்பட்டது. சாங்கியம் வைசேடிகம் போன்ற மரபுகளில் அது ஒன்றுக்கொன்று முரண்படும் பொருட்கள் செயல்தளத்தில் ஒன்றாகக் கலப்பதை சுட்டிக்காட்டுவதற்காக கையாளப்பட்டது.

சாங்கிய மரபில் புருஷ தத்துவம் உள்ளே வந்தபின்னர் புருஷனும் பிரகிருதியும் இணையும் புள்ளியைச் சுட்டிக்காட்ட யோகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. சாங்கிய மரபின் ஒரு பிரிவாக இருந்த யோகமரபில் முதலில் அந்த பொருளிலேயே யோகம் என்ற சொல் கையாளப்படுகிறது.

அதாவது மூல இயற்கையும் பரமபுருஷனும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும் இரு அடிப்படை சக்திகள். எளிதில் இதை புரிந்துகொள்ள ஓரு வழி சொல்கிறேன். இந்தபிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருளையும் ஒன்றாகச் சேர்த்தால் அதுதான் மூல இயற்கை. இந்தபிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பிரக்ஞையையும் ஒன்றாகச் சேர்த்தால் அதுதான் பரமபுருஷன்.

புருஷன் இயற்கைக்கு சாட்சி. இயற்கையில் உள்ள மூன்று குணங்களான சத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் ஆகியவை புருஷன் பார்ப்பதன் மூலமே உருவாகி வரக்கூடியவை. அந்த முக்குணங்களும் ஆதி இயற்கையில் சமநிலையில் இருக்கின்றன. அவற்றின் சமநிலை குலையும்போது ஆதிஇயற்கை பலபலவாக பிரிந்து அளவில்லாத பேதங்கள் கொண்ட இயற்கையாக மாறுகிறது.

அது பிரியும்போது புருஷனும் பலகோடி தனி பிரக்ஞைகளாக மாறுகிறான். இந்த தனி புருஷன் இயற்கையை பார்ப்பதன் மூலமே நாம் காணும் இந்த பிரபஞ்சம் உருவாகி வருகிறது. இதுவே பிரபஞ்சம் உருவான முறைக்கும் சாங்கியம் கூறும் விளக்கமாகும்.

இந்த புருஷன் தன்னை பலதுளிகளாக பிரித்துக்கொண்டு அதில் ஒரு துளியில் நின்று பார்க்கும் பார்வையே நம்முடைய பார்வை. அவன் அந்த தனிப்பிரக்ஞையை உதறி தன்னை தொகுத்துக்கொண்டு பரமபுருஷனின் ஒட்டுமொத்த முழுமைப்பார்வையை அடைந்தான் என்றால் அவன் கண்முன் இயற்கையும் தன் பேதங்களை களைந்து ஒற்றைப்பேருருவாக, ஆதி இயற்கையாக, வந்து நிற்கும். இந்த இணைந்த முழுமைப்பார்வை யோகம் எனப்பட்டது.

சாங்கியத்தின் துணைத்தரிசனமாக யோகம் உருவாகி பின்னர் பிரிந்து தனி தரிசனமாக ஆகியது. அதன் அடிப்படைகளை தொகுத்து பதஞ்சலி முனிவர் யோகசூத்திரம் என்ற நூலை உருவாக்கினார்.

பதஞ்சலி யோக சூத்திரம் சொல்லும் யோகம் என்பது மனதை நிறுத்தி பிரக்ஞையை தனியுணர்வு இல்லாத நிலைக்கு கொண்டு சென்று முழுமை நோக்கை அடைவதுதான். இதை ஆற்றை நிறுத்தி மலையுச்சியில் அதன் உற்பத்தி இடத்துக்கு திருப்பிக்கொண்டுசெல்வது போன்றது எனலாம்

‘யோக: சித்தவிருத்தி நிரோத:’ என அது ஆரம்பிக்கிறது யோகசூத்திரம். மனமெனும் செயலை தடுத்தல்தான் அது. நான் எனது என்ற மன இயக்கத்தை தடுப்பது. ஒட்டுமொத்தமாக ஆவது. அதுதான் யோகம். அந்த நிலையை அடைய பல வழிகளை பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது. பிற்பாடு அந்த வழிகளும் யோகம் எனப்பட்டன.

அதன்பின் காலப்போக்கில் அந்த வழிகளில் ஒரு பகுதியான உடற்சார்ந்த பயிற்சிகள் யோக ஆசனம் [யோகத்தில் அமர்ந்திருக்கும் முறை] என்ற சொல்லால் அழைக்கப்பட்ட்ன. அது சுருங்கி இன்று அதுவே யோகம் என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு யோகம் என்ற சொல் பல தளங்களில் கையாளப்படுகிறது. ஒன்ரு, அதாவது கூட்டம்,இணைதல் என்ற பொருளில். இரண்டு, ஒருங்கிணைந்த முழுமை நோக்கு என்ற பொருளில். மூன்று, யோகம் என்ற தனியான தரிசனம் என்றபொருளில் ,நான்கு அந்த தரிசனம் காட்டும் செயல்முறைகள் என்ற பொருளில். கடைசியாக, முரணியக்க நோக்கு என்ற பொருளில்.

கீதையில் இந்த மூன்று பொருளிலும் யோகம் என்ற சொல் பயின்று வருகிறது. கீதை தன்னை ஒரு யோகசாஸ்திரம் என அழைத்துக்கொள்வது முரணியக்க அணுகுமுறை கொண்ட நூல் அது என்ற பொருளியேலே. சாங்கியயோகத்தின் கடைசிப்பாடல்களில் யோகதரிசனம் பேசப்படுகிறது. பலவரிகளில் யோகம் என்று ஒன்றுகூடுவதே சொல்லப்படுகிறது. பிற்பகுதிப்பாடல்களில் யோகமென்னும் செயல்முறைகுறித்து சொல்லப்படுகிறது

அனைத்தையுமே யோகம் புரிதல் என்ற பொருளில் கீதை சொல்வதாக இன்று பலரால் பொருள்கொள்ளப்படுகிறது. யோக சாஸ்திரம் என்னும் சொல்லை வைத்துக்கொண்டு கீதை நேரடியாகச் சொல்லும் பொருளுக்கு அடியில் பல மர்மமான யோகமுறைகளை குறிப்பாலுணர்த்துகிறது என்று சிலர் சொல்வதுண்டு. அவர்கள் ஒவ்வொரு சொல்லையும் மனம்போனவாக்கில் பிளந்து விளக்கி யோகப்பயிற்சி சார்ந்த பொருளைக் கொள்கிறார்கள்.

கீதை ஒரு அலோபதி மருந்து அல்ல என்பதை புரிந்துகொண்டால் போதும். நோயாளி போய் அமர்ந்ததுமே நாக்கை நீட்டுங்க என்று சொல்லி மார்பில் ஸ்டெதெஸ்கோப்பை வைத்துவிட்டு அதே நேரத்தில் மருந்தையும் எழுதிவிடும் டாக்டர் அல்ல கிருஷ்ணன். அனைத்து மனிதர்களுக்கும் ஒரே மருந்தை அவர் சொல்வதில்லை.

அவர் மனிதர்களின் இயல்புகளை, தேடல்களை அறிவார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மருந்தே தேவை என அறிவார். ஏனென்றால் கிருஷ்ணன் ஒரு தீர்க்கதரிசி அல்ல. ஒரு மாபெரும் ஞானமரபின் இடைவிடாத நீண்ட மரபின் நுனியில் உருவான ஞானி. ஆகவேஅவரது ஞானமும் பலமுறை பல தளத்தில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதனால்தான் கீதை மிகநுட்பமாக மனிதர்களை பகுக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் இயல்பு சார்ந்த மருந்தை அளிக்கிறது

நாம் கீதையை வாசித்தோம் என்றால் சாங்கிய யோகம் முதலே மனிதர்களை கீதை பகுக்க ஆரம்பிப்பதைக் காணலாம். நடைமுறை நோக்கு கொண்டவர்கள் தர்க்க நோக்கு கொண்டவர்கள் என்ற பிரிவினை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதுவே கீதையின் வழிமுறை. ஒவ்வொரு வழியும் பிறிதொன்றுடன் முரண்பட்டுத்தான் இயங்குகிறது. இதற்காகவே யோகாத்ம மார்க்கம் கீதையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

காந்தி கீதையில் இருந்து எடுத்துக்கொண்டது கர்ம யோகத்தை. அரவிந்தர் எடுத்துக்கொண்டது ஞானயோகத்தை. ராமகிருஷ்ணர் எடுத்துக்கொண்டது மோட்ச சன்யாச யோகத்தை. எல்லா நிலைகளுக்கும் எல்லா மனங்களுக்கும் கீதை உரிய விடை அளிக்கிறது. ஒரு விடையில் இருந்து இன்னொரு விடைக்கு அர்ஜுனனின் கேள்விகள் வழியாக அது வழுக்கிச் செல்கிறது.

இந்த தொகுப்புமுறைக்காகவே அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் போர்க்களத்தில் சொன்ன உபதேசமாக அது அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் இலக்கிய நுட்பங்கள் முழுக்க முழுக்க இந்த தளத்திலேயே காணக்கிடைக்கின்றன. கீதை பேரிலக்கியமாக ஆவதும் இந்த தொகுப்புமுறைக்காகவே.

நடராஜகுரு பஞ்சாபில் ஒரு கீதைமாநாட்டுக்குச் செல்ல நேர்கிறது . அங்கே ஏற்கனவே பேசியவர்கள் அர்ஜுனன் அறிவிழந்து தடுமாறும்போது கிருஷ்ணன் மெய்ஞானத்தைச் சொன்னார் என்று பேசினார்கள். தான் பேச எழுந்ததுமே நடராஜகுரு கேட்டார் ‘என் சுயநலத்துக்காக மூத்த பெரியவர்களையும் சகோதரர்களையும் கொல்ல மாட்டேன் என ஒருவன் சொன்னால் அது அறிவின்மையா என்ன?’ அங்கே உள்ளவர்களால் பதில் சொல்ல முடியவில்லை

குருவே விளக்கினார். கீதையின் தொடக்கத்தில் அர்ஜ்ஜுனன் சொல்லும் அந்த துயரம் மிக்க சொற்கள் அறியாமையைக் காட்டுவன அல்ல. அது ஒரு மாபெரும் விவேகம். சாதாரண மனிதனுக்கு அது வராது. என் நன்மைக்காக நான் பிறருக்கு தீங்கிழைக்கப்போவதில்லை என்று ஒருவன் சொல்வதென்பது ஒரு மன உச்சம்தான். ஓர் உண்மைஞானம்தான் அது.

அர்ஜ்ஜுனன் அந்நிலைக்கு வந்து நின்ற காரணத்தால்தான் கீதை அவனுக்குச் சொல்லப்பட்டது. எந்த குருவும் சீடனின் அறியாமையைக் கண்டு அவனுக்கு கற்பிக்க ஆரம்பிக்க மாட்டார். அவனுடைய அறிவை கண்டபின் மேலும் அறிவை அளிப்பதற்காகவே கற்பிக்க ஆரம்பிப்பார். அர்ஜுனனின் அந்த மனசஞ்சலம் ஒரு பெரிய விவேகம். ஆகவேதான் கிருஷ்ணன் அவனுக்கு கீதையை உள்வாங்கும் பக்குவமிருப்பதாகச் சொன்னார்.

கிருஷ்ணன் ‘ நீ ஞானியரின் சொற்களைச் சொல்கிறாய்’ என்று அர்ஜுனனிடம் சொல்வது கிண்டலாகத்தான் என்று பலரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அது தவறு. அது ஞானியரின் சொல்லேதான். ஆகவேதான் அந்த அத்தியாயமும் அர்ஜுன விஷாத யோகம் என்று சொல்லப்ப்ட்டுள்ளது. அதுவும் ஒரு யோகமே. அது கேள்வி மட்டும் உள்ள அத்தியாயம் அல்ல, அது ஒரு பதில்தான். முதற்கட்ட பதில்.

ஒரு சாதாரண லௌகீக மனிதனைப்பொறுத்தவரை அர்ஜுனன் சொல்லும் அந்த வரிகளே அவனுக்கு போதுமானதாகும். ‘என் சுயநலமல்ல என் சுற்றமும் நாடும் வாழவேண்டும் என்ற பொதுநலமே எனக்குத்தேவை’ என ஒருவன் உணர்ந்தால் அதுவே அவனுக்கு போதும். அதுவே அவனுக்கு விடுதலை அளிக்கும். அது பொய்யல்ல அது ஓரு உண்மை.

அந்த உண்மைக்கு மாறாக இன்னும் பெரிய உண்மையை முன்வைக்கிறது கீதை. சாமானியதளத்தில் இருந்து விசேஷ தளத்துக்கும் அதற்கு மேலே அதிவிசேஷ தளத்துக்கும் செல்கிரது. லௌகீகத்தில் இருந்து ஆன்மீகத்துக்கும் ஆன்மீகத்தில் இருந்து தூயமெய்ஞானத்துக்கும் செல்கிறது.

அதாவது அறியாமைக்கு எதிராக அறிவை முன்வைக்கும் நூல் அல்ல கீதை. அறிவுக்கு எதிராக இன்னும் பெரிய அறிவை முன்வைக்கும் நூல் அது. இதுவே கீதையின் முரணியக்கமாகும்.

அர்ஜுனன் சொல்வது ஒரு சாமானியனின் விவேகம். அதற்கு எதிராக ஒரு கடமைவீரனின் விவேகத்தை முன்வைக்கிறது சாங்கிய யோகம். அந்த கடமைவீரனின் விவேகத்துக்கு பிறகு அதைவிட முழுமைநோக்குள்ள ஒரு கர்மவீரனின் ஞானத்தை முன்வைக்கிறது. அதன்பின் ஒரு அறிஞனின் விவேகத்தைச் சொல்கிறது. கடைசியாக ஒரு ஞானியின் விவேகத்தை முன்வைத்து முடிகிறது. ஒவ்வொன்றும் முந்தையதில் இருந்து முரண்கொண்டு கிளைத்து விரிகிறது. இந்த முரணியக்கமே கீதையின் யோக சாஸ்திரமாகும்.

சின்ன வயதில் அம்மாவுடன் கோயில்களுக்குச் செல்வேன். நடந்துதான் போகவேண்டும். பல கிலோமீட்டர். அம்மா சொல்வாள். அதோ ஒரு தென்னைமரம் தெரிகிறதல்லவா, அதற்கு அந்தப்பக்கம்தான் கோயில் என்று. தென்னை மரம் தாண்டியதும் அதோ அந்த வீட்டுக்கு கொஞ்சம் அப்பால்தான் என்பாள். அதன்பின் அந்த ஓடையை தாண்டினால் உடனே கோயில் என்பாள். அப்படி வழிச்சுமை தெரியாமல் கொண்டுசென்றுகொண்டே இருப்பாள்.

கண்ணன் ஒரு கனிவான அன்னை. அவனுக்கு வணக்கம்

நன்றி

[9-9-10 அன்று சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களின் தியான ஆசிரமம் பினாங்கில் ஜெயமோகன் உரை]

A SLAP ON THE FACE OF TAMILNADU GOVT

Thanks:The NewIndian Express

A HISTORIC verdict and a judicial precedent with far-reaching consequences” was how civil rights activists hailed the Madras High Court’s order quashing the appointment of Letika Saran as Director General of Police of Tamil Nadu.

While DGP R Nataraj, who challenged Letika’s appointment, declined comment on Friday, a legal website quoted his counsel A S Nandakumar as saying that similar cases had been filed in Andhra Pradesh, Maharashtra and Bihar.

“The Madras High Court has for the first time given a judgment on the issue which will have an important bearing,” he said.

It is the manner of Letika’s appointment in January that raised the hackles of informed public opinion in the State and now the court too seems to share their view.

While the Supreme Court directives of 2006 — issued in the Prakash Singh case — calls upon State governments to “ensure selection of the DGP from amongst the three seniormost officers of the department empanelled for promotion to that rank by the UPSC on the basis of their length of service, very good record and range of experience,” no such thing happened in her case. It was just a brief, late night order.

No wonder, internationally recognised rights activists, such as Henry Tiphagane of People’s Watch saw her appointment “as contempt of the Supreme Court order” and the HC judgment as a fitting rebuttal.

“It is a slap on the face of the State government,” he told Express. “It has been taught a lesson.”

Describing the verdict as "historic", he said it strongly conveyed the message that the apex court's orders must be obeyed in letter and spirit. "The chief minister is also the home minister and has constantly been violating the SC orders," he said, citing the delay in the passage of the Tamil Nadu Police Reforms Bill encompassing the six directives of the apex court.

A retired DGP echoed Tiphagane, saying the government had set up a select committee under Deputy Chief Minister MK Stalin to go into the Bill, but the panel was adopting delaying tactics.

Leading lawyer and activist Sudha Ramalingam said, “There must be transparency in the appointment of not only senior police officials, but also judges,” she said.

While the buzz in media circles was whether Nataraj, much talked about for his jail reforms, would make it to the top post this time, a senior IPS officer pointed out that Letika Saran would after all be among the three seniormost officers — after Nataraj and K Vijay Kumar — named in the new list to UPSC for empanelment and could end up as the DGP again!


ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்!

ஒண்ணரை பக்க நாளேடு – தாத்தா நான் பாஸாயிட்டேன்! என்ற தலைப்பில் வந்த கூட்டாஞ்சோறு நகைச்சுவை பதிவு :-)


அயோத்தி தீர்ப்பை படிக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன், ஆனால் பல ஆயிரம் பக்கத்தில் இருக்கிறதாம். இதை டவுன்லோட் செய்வதற்குள்ளேயே தாவு தீர்ந்துவிடும், படிப்பது எப்போது? ஒரு மாறுதலுக்காக இந்த பதிவு…

டிஸ்க்ளைமர்: ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா என்று கூட தெரியாது. சங்கநிதி என் கற்பனைப் பாத்திரம் மட்டுமே. இந்த டுமீல் செய்திகளை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொண்டு குழந்தைகளை கிண்டல் செய்கிறாயா பாதகா என்று கிளம்பிவிடாதீர்கள்!

ஜெய் ஹோ ஃபிலிம்ஸ்


நேற்று கலைஞரின் கொள்ளுப்பேரனும் ஸ்டாலினின் பேரனும் ஆன சங்கநிதி ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த விழாவுக்கு கலைஞரின் குடும்பத்தினரும் சினிமாத் துறையினரும் பெருவாரியாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கநிதிக்கு வயது பத்துதான் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். முதல் படத்துக்கு கலைஞரே கதை வசனம் எழுதுவதாக இருந்ததாம். ஆனால் சங்கநிதி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள மறுத்துவிட்டதால் இப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், கவுதம் மேனன், ஷங்கர் ஆகியோர் தாங்கள் அண்ணன் சங்கநிதியிடம் கதை சொல்வதற்காக ஸ்லாட் கேட்டிருப்பதாக தெரிவித்தனர். அனேகமாக ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.


கலை நிகழ்ச்சி:

நமீதா, முமைத் கான், ரகசியா ஆகியோரின் ஆட்டம், பாட்டு, கவிஞர் வாலி தலைமை தாங்கிய கவி அரங்கம், சங்கநிதியிடம் உயர்ந்து விளங்குவது ஸ்டாலினின் திறமையா இல்லை கலைஞரின் பெருமையா என்ற பட்டி மன்றம் என்று பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாலியின் கவிதையிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கொடுத்திருக்கிறோம்.


முகத்திலே பரு

முளைக்காத சிறு உரு

ஆனாலும் கருவிலே திரு

அதற்கு காரணம் -

கலைஞர் என்ற கற்பகத் தரு

சளைக்காமல் போட்ட எரு!

உன்னிடம் சேர்ந்தாள் செந்திரு -

என்று பாற்கடலான் தொடுப்பான் செரு!


இந்த கவிதையை கேட்டதும் சங்கநிதி “What is செந்திரு? I don’t understand this Tamil!” என்று வாலியை வானளாவ புகழ்ந்தார்.


கலைஞர் கேள்வி பதில்:

கம்பெனிக்கு ஜெய் ஹோ ஃ பிலிம்ஸ் என்று ஏன் பேர் வைத்தீர்கள்?


ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என்று ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்று பலரும் குறை சொன்னார்கள். அவர்கள் முகத்தில் கரியைப் பூசவே இப்போது ஆங்கிலக் கலப்பில்லாமல் ஜெய் ஹோ ஃபிலிம்ஸ் என்று பேர் வைத்திருக்கிறோம். மேலும் இது ஏ. ஆர். ரஹ்மானின் புகழ் பெற்ற, ஆஸ்கார் விருது வென்ற, அன்னியர் பாராட்டும் பாட்டு. சிறுபான்மையினரிடம் இயக்கம் கொண்டுள்ள அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தவே இப்படி ஒரு பேர்.


பத்து வயதிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு பணம் எப்படி வந்தது?


குறுமுனி என்று சொல்லப்பட்ட அகத்தியன் தமிழ் மொழிக்கு இலக்கணமே எழுதவில்லையா? உருவத்தையும் பருவத்தையும் பார்த்து புருவத்தை உயர்த்தாதீர்கள், துருவ நட்சத்திரமாய் இலங்கும் திறமையைப் பாருங்கள்.


பத்து வயது என்பது சட்டப்படி மைனர். மைனராக இருக்கும்போதே திரைப்படத் தயாரிப்பா?


சட்டப்படி மைனராக இருந்தால் தவறில்லை. இட்டப்படி பெண்களோடு சுற்றும் மைனராக இருந்தால்தான் தவறு.


இருந்தாலும் இந்த வயதில் படம் எடுக்கும் அளவுக்கு பணம் என்றால் உதைக்கிறதே?


கலைஞர் உதவியாளர் சண்முகநாதனிடம் ஏதோ பேசுகிறார். பிறகு: இந்த நல்ல சமயத்தில் அரசின் திட்டம் ஒன்றைப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். பத்திரிகைகள்தான் நாட்டில் ஜனநாயகத்தை காக்கின்றன. ஆனால் பத்திரிகை நிருபர்களோ வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஈ.சி.ஆர். ரோட்டில் இலவச வீடு வழங்கும் திட்டம் – சங்கநிதி திட்டம் – வகுத்திருக்கிறோம். சங்கநிதி திட்டம் பற்றி பத்திரிகையாளர் சங்கத்தில் பேசுவோம்.


கலைஞரின் அறிவிப்புக்கு பிறகு பத்து வயதில் சினிமா தயாரிப்பது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா, ஓசியில் கிடைக்கும் வீடு எத்தனை சதுர அடி, சங்கநிதிக்கு பிடித்த உணவு என்ன, பிடிக்காத உணவு என்ன, இரவு எத்தனை மணிக்கு தூங்குவார், காலை எத்தனை மணிக்கு எழுந்திருப்பார், ஹோம்வொர்க் செய்ய அப்பா உதவி செய்வாரா, அம்மாவா, இல்லை ஹோம்வொர்க் கொடுக்கும் வாத்தியாரே அதை செய்தும் தந்துவிடுவாரா என்ற டைப்பில் (மட்டுமே) பல கேள்விகள் எழுந்தன. இடம் இல்லாததால் எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியவில்லை.


ஜெயலலிதா கருத்து:

இதைப் பற்றி ஜெயலலிதாவின் கருத்தை அறிய முயன்றோம். அவர் கொடநாட்டில் படுக்கையை விட்டு எழுந்த பிறகு கருத்து சொல்வார் என்று ஓ.பி. பன்னீர்செல்வம் பயந்து பயந்து பணிவோடு கருத்து தெரிவித்தார்.


விஜயகாந்த் பேட்டி:

இப்படி தன குடும்பமே கண்ணாக இருப்பவர் நாட்டுக்கு முதல்வராக இருக்க அருகதை அற்றவர் என்று விஜயகாந்த் கூறினார். நீங்களும் உங்கள் குடும்பத்தவரைத்தானே முக்கிய பதவியில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அது ஒரு குறையில்லை, கலைஞரும் என் குடும்பத்தவருக்கு முக்கிய பதவி அளித்தால் நான் அவரையும் குறை சொல்ல மாட்டேன் என்று கருத்து சொன்னார். தமிழகத்தில் கூட்டணி மாறுகிறது என்று திமுகவினரும், பெட்டி மாறுகிறது என்று அதிமுகவினரும் காரசாரமாக மேடையில் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.


ராமதாஸ் கருத்து:

கூட்டணி வைத்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும் என்று ராமதாஸ் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். திமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்த சங்கநிதிக்கு வாழ்த்து சொல்வோம்; இல்லையேல் வாரிசுகளைக் கொண்டு கலை உலகை கைப்பற்றும் முயற்சிகளை கண்டிப்போம், இதைக் கூடவா சொல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் நிருபர்களை செல்லமாக கடிந்துகொண்டார்.


சத்தியமூர்த்தி பவனில் கூட்டம்:

இது குறித்து சத்தியமூர்த்தி பவனில் கூடிய கூட்டம் எந்த கோஷ்டிக்கு எத்தனை ப்ரிவ்யூ டிக்கெட் என்ற சண்டை முற்றி அன்போடு கலைந்தது என்று தெரியவருகிறது.


துக்ளக் தலையங்கம்:

குடும்பமே கட்சி என்ற நிலையிலிருந்து இன்று குடும்பமே சினிமா என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும் நல்லதில்லை, கலைஞர் வீட்டுக்கும் நல்லதில்லை. வாரிசு போர்கள் இன்னும் பெரிதாகப் போகிறது.


கலைஞர் மீதும் குறைப்படுவதற்கில்லை. வயதாக ஆக குடும்பத்தினர் மீது பாசம் பெருகிக் கொண்டேதான் போகும். இதனால்தான் குடும்பம் இல்லாத தலைவர்களையே நாம் ஆதரிக்க வேண்டும். காமராஜ் கட்டை பிரம்மச்சாரி. அவரை விட சிறந்த தலைவர் யார்? வாஜ்பேயி திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரை விட தேசபக்தி உள்ள பிரதமர் யார்? ஜெயலலிதாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனால் எல்லாரும் ஜெவுக்கே ஓட்டு போடுங்கள்!


டி. ராஜேந்தர் பேட்டி:

வாரிசுகள் இப்படி சினிமாவில் நுழைவது நல்லதில்லை என்று டி.ஆர். பேட்டி அளித்தார். உங்கள் வாரிசு திரை உலகில் முன்னணி ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு சிங்கண்டா சிம்பு, வச்சுக்காதே வம்பு என்று எச்சரித்தார்.


ஜூவியில் கழுகு ரிப்போர்ட்:

சங்கநிதி எலிமெண்டரி ஸ்கூல் முடித்து ஹைஸ்கூல் சேர்வதற்கு முன் தாத்தாவிடம் ஆசி வாங்க வந்தாராம். தாத்தா நான் பாஸாயிட்டேன் என்று ஆசையோடு ஓடி வந்த அவரிடம் கலைஞர் நீ பெரியவனாகி என்ன பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டாராம். பெரியவனாகி என்ன செய்ய வேண்டும் என்பதை விடுங்கள், இப்போது யூத் படங்கள் எதுவுமே நன்றாக இல்லை, ஒரு நல்ல யூத் படம் எடுக்க வேண்டும் என்று சங்கநிதி சொன்னாராம். ஜெய் ஹோ என்று கலைஞர் ஆசீர்வதிக்க, அதையே கம்பெனி பெயராக வைத்து சினிமா தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்!


அழகிரி குமுறல்:

என் பேரன் எல்கேஜி முடித்து யுகேஜி போனானே அவனை வைத்து சினிமா வேண்டாம் ஒரு டிவி சீரியல், அது கூட வேண்டாம் ஒரு விளம்பரப் படம் கூட தயாரிக்கவில்லையே என்று அழகிரி குமுறுகிறாராம். அவரை சமாதானப்படுத்த ஃபோன் செய்த தயாளு அம்மையாரிடம் தேர்தலுக்கு மாங்கு மாங்கென்ற வேலை செய்ய மட்டும் நான், ஆனால் சினிமா கம்பெனி ஸ்டாலின் பேரனுக்கு மட்டும்தானா என்று ஆவேசமாக கேட்டாராம். ஜெய் ஹோ கம்பெனியிலிருந்து வரும் எந்த படமும் மதுரைக்கு தெற்கே ரிலீஸ் ஆகாது என்று சூளுரைத்தாராம். கலைஞர் நிலைமையை சமாளிக்க அழகிரி பேரனுக்கு விஜய் ஹோ ஃபிலிம்ஸ் என்று கம்பெனி ஆரம்பிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறாராம். என்ன ஆகுமோ என்று அரசியல் வட்டாரங்கள் கவலையோடு நிலையை கவனித்து வருகின்றன.


கொசுறு செய்தி:

ஸ்டாலின், அழகிரி குடும்பத்திலிருந்து இப்படி சினிமா தயாரிப்பாளர்கள் கிளம்புவதை சன் குழுமம் கவலையோடு பார்த்து வருகிறதாம். தங்கள் இமேஜை உயர்த்த இனி மேல் கலாநிதி மாறன் தயாரிக்கும் என்று போட்டால் மட்டும் போதாது, ஓபனிங் சாங்கில் ஹீரோவுக்கு பதிலாக கலாநிதியையே வைத்து எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம். கலாநிதிக்கு நடனம் கற்றுக் கொள்ள நேரமில்லை என்பதால் மாண்டேஜாக எடுத்து விடலாம் என்று யோசிக்கிறார்களாம். என் பேரு படையப்பா மெட்டில் என் பேரு கலாநிதி, சன் டிவி உங்க தலைவிதி, மிச்ச சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டு மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி மிதி என்று வாலி எழுதிய பாட்டு ஒன்று இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது.

Wednesday, October 6, 2010

நகுலன் கவிதைகள் சில..

நகுலன் கவிதைகள் சில..

1,
நான்
சரி
நான் மாத்திரம்
சரியே சரி.


2,
"இப்போழுது
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்றுகேட்டார்"
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

3,
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ப்ளாஸ்க்
நிறைய அய்ஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திபெட்டி/ ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவத்ற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

4,
நான் இறந்த பிறகு
எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள்
நடத்த வேண்டாம்.
ஏனென்றால்,
என்னால் வர முடியாது!’’

5,
எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புத்தகத்தில் எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

6,
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!

7,

என்னைப்
பார்க்கவந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
8,
யாருமில்லாதபிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

9,
நீயிருக்கநானிருக்க
நேற்று இன்று நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!

10,
உன்னையன்றி
உனக்கு
வேறுயாருண்டு?

11,
ஆர்ப்பரிக்கும்
கடல்அதன் அடித்தளம்
மௌனம்
மகா மௌனம்!

12,
முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை
ஞானம்!

13,
வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’ என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’ என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறுஎல்லாம் தெரியும்’’என்றேன்!

14,
ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.

15,
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும் நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்
ன!

ஓர் எட்டுவயதுப் பெண்குழந்தையும் நவீன மலையாளக் கவிதையும்





(நகுலனின் கதைகளில் எனக்கு மிகப் பிடித்த ஒன்று இது. கணையாழியில் 1992ல் வெளியானது, பிறகு காவ்யா பதிப்பகம் நகுலன் சிறுகதைகள் என்ற தலைப்பில் தொகுத்தது. காவ்யா பதிப்பகத்திற்கு நன்றியுடன் இதை இங்கே பகிர்கிறேன்).

என் அறையில் இருந்தேன். அந்த எட்டு வயதுக் குழந்தை வந்தது. அதன் தாய்மொழி மலையாளம். அது ஒரு கிராமத்தில் ஒரு சிறு வகுப்பில் படித்துக் கொண்டிருந்தது. கறுப்பிலும் கறுப்பு. அறிவு கனலும் கண்கள். அதன் பெயர் கலா. வீட்டில் சிமி என்று அழைப்பார்கள்.

கேட்டது: “மாமன், எனக்கு ஒரு பாட்டுப் புத்தகம் தருமோ?” சிறிது நேரம் சென்றபின், “மாமாவிடமிருந்து ஒரு புத்தகம் கொடுத்தால் போதும். விலை கொடுத்து வாங்க வேண்டாம்!” என்றது.

நான் நேரம் சிறிது சென்றபின் மலையாளத்தில் ’புது முத்திரைகள்’ என்ற கவிதைத் தொகுதியைக் கொடுத்த கணமே ஒரு ஐயம். அது மலையாளப் புதுக்கவிதையை அணுக முடியுமாவென்று. அடுத்து, அதற்கு ’குஞ்சுண்ணி’ யின் ‘கிங்கிணிக் கவிதைகள்’ என்ற தொகுதியை (அதில் சித்திரங்கள் இருந்தன)யும் வாங்கிக் கொடுத்தேன். குழந்தை ஒரு கிராமத்தில் L.P. பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது என்பதை மீண்டும் கூறவேண்டும்.

மறுநாள் குழந்தை என் அறைக்கு வந்தவுடன் ”புது முத்திரைகள் எப்படி?” என்று கேட்டேன். “படித்தேன்” என்றது. இதைச் சொல்லிவிட்டு, மாதவன் அய்யப்பத்து எழுதிய ‘பணி அறைக்குள்’ என்ற கவிதையிலிருந்து சில வரிகளை ஒரு உள்நாட்டத்துடன் இசை பூர்வமாகப் பாடிக் காண்பித்ததும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நான் அதனிடம் ”கிங்கிணிக் கவிதைகளோ?” என்று கேட்டேன். அது அதிலிருந்து ‘ஸைக்கிள்’ என்ற கவிதையின் ஒரு வரியை ‘வட்டத்தில் சவிட்டியால் நீளத்தில் ஓடும்’ வரியை மிகவும் சுய ஈடுபாட்டுடன் பாடிக் காண்பித்ததும் எனக்கு மீண்டும் ஒரு சில கவிதைகளைப் படித்துக் காட்டியது. அது எனக்கு ஓர் அனுபவமாகவெ இருந்தது. குழந்தை பாடப் பாட, நான் என் சூழ்நிலையிலிருந்து விலகி அதைக் கேட்ட வண்ணம் இருந்தேன். குழந்தை பாட, நான் கேட்க, அவ்வரிகள் என் பிரக்ஞையில் வட்டமிட்டன.

1. ஜன்ம காரணி
பாரதம்
ஆஹா ஆஹா ஆஹா
கர்ம மேதினி பாரதம்
நம்மளாம் ஜனகோடிதன்
அம்மையாகிய பாரதம்
ஆஹா ஆஹா ஆஹா

2. பல பல நாளுகள்
ஞானொரு புழுவாய்
பவிழக் கூட்டில் உறங்கி
இருளும் வெட்டமும் அறியாதே அங்ஙனே
நாள்கள் நீங்கி
அரளிச் செடியுடே
இலைதன் அடியில்
அருமக் கிங்கிணி போலே
வீசுங் காற்றத்தில் இளகி விழாதே
அங்கனே நின்னு

ஒருநாள் சூரியன்
உதிச்சு வரும்போள்
விடரும் சிறகுகள்வீசி
புறத்து வந்து அழகு துடிக்கும்
பூம்பாற்றை (வண்ணத்துப் பூச்சி)
தளிராய் விடர்த்து வீசும்
பனிநீர்ப்பூவில்
படர்ந்து பற்றியிருந்தது.
பூவில் துள்ளும் பூவதுபோலே
பூத்தேன் உண்டு களிச்சு.

அதன் குரல் நின்றதும் நான் மீண்டும் என் அறையில் புகுந்தேன். நினைவில் ஒரு கனவு வந்தது; வந்ததுபோல் அது மறைந்தது. இடையில் குழந்தை தன் பாட்டு வாத்தியார் பாடல்களை நன்றாகச் சொல்லிக் கொடுப்பார் என்றும் சொன்னது.

எனக்கு நவீன மலையாளக் கவிதைகளில் குஞ்சுண்ணியிடம் ஒரு தனிப்பட்ட பிடிப்பு உண்டு. அவர் கவிதைகளைக் குழந்தைகளும் பெரியவர்களும் அனுபவிக்க முடியும். அவர் கவிதைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தளங்கள் உண்டு. வரிவடிவம் ஒலிவடிவமாக கவிதையின் ஒலிச்சரடு விதவிதமான தளங்களிலே சுழித்துச் செல்வதைக் காண்கையில், அவைகளைக் கம்பன் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘செவிநுகர் கனிகள்’ என்றே சொல்ல வேண்டும்.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்கு வந்தது. ஒரு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியன் என்ற நிலையில் எனக்குச் சற்றுச் சுயமாக சிந்திக்கும் மாணவ - மாணவிகளிடம் ஒரு சாய்வு உண்டு. நான் அதனிடம் கேட்டேன்: “ஏன், உனக்குக் குஞ்சுண்ணிக் கவிதைகள் இஷ்டம்தானே? நீயும் அவர் மாதிரி சிலகவிதைகள் எழுதலாமே?” என்றேன். ”அதற்கென்ன எழுதலாமே” என்று சொல்லி என் அறையிலிருந்து மறைந்தது. ஒரு இசைவெட்டு.

ஒருநாள் வீட்டில் வழக்கமாகக் காய்கறிகள் வாங்குகிறவள் இந்தக் குழந்தையைப் பார்த்து “ஏ கறுப்பி” என்று கூப்பிட்டாள். எனக்கு ஒரு விதமான சஞ்சலம் ஏற்பட்டாலும் குழந்தையின் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. சில சமயங்களில் அதன் முகத்தில் ஒருவித நிழல் படர்வதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அதன் ’அம்மூம்மா’ (ஆச்சி) இந்தக் குழந்தைக்கு ஒரு ஜதை காதில் அணியும் சாதரண கறுப்புக் கம்மல்களைக் கொடுத்தவுடன் அடுத்த வீட்டிலுள்ள ஓர் இளம் பெண் “ஒ இதுவும் கறுப்பு” என்று சொல்லிச் சிரித்தது.

மறுபடியும் அந்தக் குழந்தை என் அறைக்குள் வந்ததும் அது என்னிடம் சொன்னது: “மாமன், மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்”

குழந்தை சுய லயிப்புடன் அக்கவிதைகளைப் படிக்க, நான் என்னை மறந்து அவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிமி
குமி
உமிக்கரி

நஞ்சு
குஞ்சு
மத்தைங்காய்

மணிக்குட்டன்
குணிக்குட்டன்
கொடுவாளை

குறிப்பு : சிமி குழந்தையின் பெயர். நஞ்சு குழந்தையின் தங்கையின் பெயர். கொடுவாளை - ஒருவகை மீன். மணிக்குட்டன் - குழந்தையின் தம்பியின் பெயர்.

மறுபடியும் என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தையில்லை; கவிதையில்லை; நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது

நன்றி :ஜ்யோவ்ராம் சுந்தர்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்..

** ரஜினியை மீண்டும் வருங்கால முதல்வராக்க ஆரம்பித்து விடும் வாரமிருமுறை பத்திரிகைகள்.

** அவர் அப்படி அரசியலுக்கு எல்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு பாராட்டு விழா மஞ்சள் துண்டாருக்கு நடத்தி அதில் ரஜினியையும் கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்.

** அடுத்த படம் பற்றி பல ‘கதை’கள் வர ஆரம்பிக்கும்.

** ’வர்க்கமயமாக்கப்பட்ட சூழலில் எந்திரனின் மாசு ஏற்படுத்தியிருக்கும் தூசு’ என்கிற ரீதியில் தமிழ் வலையுலகில் ‘ஜெலூசில்’ புலம்பல்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும்.

** சன் பிக்சர்ஸின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ‘படத்தை புறக்கணியுங்கள்’ என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று எந்திரன் திரைப்படத்தை சோமாலியாவில் பெரும் தோல்விப்படமாக மாற்றிய ‘தோழர்’களுக்கு நன்றி என்று சில பதிவுகள் வரலாம்.

** படத்தில் கடைசி சீனில் வரும் அந்த விளம்பர பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம். 2015-ல் தலைவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!

** கூடிய விரைவில் ஒரு படத்தில் விவேக் ரோபோ மாதிரி வேஷமிட்டு அடி வாங்குவார்

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

** ஜப்பானியர்கள் ஏற்கனவே காமிக்ஸ் பிரியர்கள். இனிமேல் ‘ரோபோ’ காமிக்ஸ் அங்கே வர ஆரம்பித்து விடும்.

** எந்திரன் எப்படி என்று மக்கள் தீர்ப்பு கொடுத்தாகிவிட்டது. எனவே இனிமேலும் அதை ஆதரித்து எழுதினால் நம்மை எவன் கவனிப்பான் என்ற கவலை சில பிரபலங்களுக்கு. எனவே எதிர்மறை கட்டுரைகள் வர ஆரம்பிக்கும்.

** ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.

** சில வலைப்பதிவர்கள் எந்திரன் குறித்து ஒவ்வொரு சைட்டிலும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். ஒன்றில் வசி. இன்னொன்றில் சிட்டி வெர்ஷன் 1.0, மற்றொன்றில் சிட்டி வெர்ஷன் 2.0. (அந்நியன் ரெமோ உதாரணத்தை எவ்வளவு நாட்கள் தான் சொல்வதாம்?!) இன்னும் எவ்வளவு வெர்ஷன் போகுமோ தெரியவில்லை! (ஹரன்பிரசன்னாவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல!)

** சிட்டி ரஜினி ரயிலில் ஓடும் போது எச்சில் துப்புபவரின் மூஞ்சியில் எட்டி உதைக்கும் காட்சி ஷங்கர் மற்றும் ரஜினியின் பார்ப்பனியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்று ‘தோழர்’கள் எழுதப்போவதாகக் கேள்வி. வெற்றிலை, தாம்பூலம் போடும் சாஸ்திரிகளை காண்பித்து உதைக்கச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்பது தான் கேள்வியாம்!

** குப்பை படம், இந்த வார குட்டு, பரபரப்பு படம் என்று எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிப்பார்கள்.

நன்றி - மாயவரத்தான்

சத்யஜித்ரே - "சாருலதா"

Thanks:Suresh Kananan(sureshkannan2005@gmail.com)

"நீங்கள் உருவாக்கின திரைப்படங்களில் உங்களுக்கு அதிக திருப்தியை தந்த திரைப்படம் எது?" என்றொரு கேள்வி சத்யஜித்ரே முன் வைக்கப்பட்டது. அவர் தயக்கமேயில்லாமல் குறிப்பிட்ட திரைப்படம் "சாருலதா". "இதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் 'இப்போது இருக்கிற அதே முறையில்தான் மீண்டும் இதை உருவாக்குவேன். அந்தளவிற்கு சொற்பமான குறைகளே கொண்டது. என்னுடைய பேவரைட் இதுவே" என்கிறார் ரே.

ரே ரசிகர்களால் பிரதானமாக கொண்டாடப்படுகிறதும் சர்வதேச அளவில் முதலில் பேசப்பட்ட இந்திய திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி'யை விட 'சாருலதா'வையே நான் அதிகம் கொண்டாடுவேன். உலகத்தின் சிறந்த பத்து திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் நான் எப்பாடு பட்டாவது ‘சாருலதா’வை உள்ளே கொண்டு வருவேன். அந்த அளவிற்கு என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படமிது. பாலியல் ரீதியான உறவுச் சிக்கலை இவ்வளவு நுட்பத்துடனும் subtle-ஆகவும் கையாண்ட எந்தவொரு உலகத் திரைப்படத்தையும் இதுவரை நான் கண்டதில்லை.





பயப்படாமல் தொடர்ந்து வாசியுங்கள்.

நான் இந்த இடுகையில் எழுதப்போவது இந்தத் திரைப்படம் குறித்த முழுமையான பார்வையல்ல. அப்படி எழுதினால் அது பத்திருபது இடுகைகளுக்காவது நீளும். அல்லது ‘பதேர் பாஞ்சாலி’ குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதின ‘நிதர்சனத்தின் பதிவுகள்’ போன்று இத் திரைப்படத்தையும் பற்றி யாராவது எழுதினால்தான் உண்டு. (ஒரு திரைப்படம் குறித்த முழுமையான அனுபவப்பகிர்வு தமிழில் நூலாக வெளிவந்தது அதுதான் முதல் என்று நினைக்கிறேன்).

நான் எழுதப் போவது இத்திரைப்படத்தில் என்னை பிரதானமாக கவர்ந்த குறிப்பிட்டதொரு காட்சியைப் பற்றி மாத்திரமே.

என்னுடைய வீட்டுத் தொலைக்காட்சியின் மேல் இத்திரைப்படத்தின் குறுந்தகடு நிரந்தரமாகவே வைக்கப்பட்டிருக்கும். இனிப்பை சாப்பிடுகிற சிறுவன் போல் அவ்வப்போது சில காட்சிகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வாறான காட்சிகளில் நான் எழுதப்போகும் இந்த காட்சிக் கோர்வைதான் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. குறுந்தகட்டில் சம்பந்தப்பட்ட பகுதி தேய்ந்து நைந்து கூட போயிருக்கலாம்.

அதற்கு முன்னால் இத் திரைப்படத்தின் மற்றும் சம்பந்தப்பட்ட காட்சியின் முன்னோட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தாகூரின் ‘சிதைந்த கூடு’ எனும் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 1964-ல் வெளியானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், வங்காளத்தின் சுதந்திரப் போராட்டம் தனது தீவிரத்தை எட்டிக் கொண்டிருந்த காலத்தில் இத் திரைப்படத்தின் நிகழ்வுகள் அமைகின்றன. தான் நடத்தும் அரசியல் பத்திரிகையே கதி என கிடைக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவரது அரவணைப்பை ஏங்கி எதிர்பார்த்து கிடைக்காமல் தனிமையில் புழுங்கும் அவரது மனைவி. அவர்களது வாழ்க்கையில் இனிமையான குறுக்கீடாக நுழையும் ஒரு இளைஞன். இந்தப் பிரதானமான மூன்று பாத்திரங்களைச் சுற்றித்தான் இத்திரைப்படம் இயங்குகிறது.

()

சாருவின் தனிமையை புரிந்து கொள்ளும் ஆசிரியர், அவளுடைய பேச்சுத் துணைக்காக சாருவின் சகோதரையும் அவளுடைய மனைவியையும் தம்முடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார். மிகுந்த நுண்ணுர்வுள்ள சாருவிற்கும் அந்த சராசரி கிராமத்துப் பெண்மணிக்கும் அலைவரிசையின் மாறுபாட்டால் எந்த சுவாரசியமும் நட்பும் நிகழ்வதில்லை. இந்நிலையில் பத்திரிகை ஆசிரியரின் உறவுக்கார இளைஞன் (அமல்) ஊரிலிருந்து வருகிறான். மிகுந்த நகைச்சுவையும் இலக்கிய ஆர்வமும் உள்ளவன்.

‘சாரு’விடம் இயல்பாக பேசி அவளிடமுள்ள எழுத்துத் திறமையை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அமலிடம் வைக்கிறார் ஆசிரியர். கவிதை எழுதும் பழக்கமுள்ள அவனுக்கும் புத்தக வாசிப்பு அனுபவமுள்ள சாருவிற்கும் உள்ள ஒரே அலைவரிசை காரணமாக நட்பு ஏற்படுகிறது.

இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஏகாந்தமான மனநிலையில், கவிதை எழுதத் தோன்றுவதாக கூறுகிறான் அமல். சாரு அவனுக்கென்றே பிரத்யேகமாக பெயரிடப்பட்ட ஒரு புத்தகத்தைத் தந்து அதில் எழுதத் சொல்கிறாள்.

தன்னுடைய கட்டுரை எழுதப்பட்டவுடன் வாசித்துக் காட்டுகிறான். ‘இதை எங்கும் பிரசுரிக்கக்கூடாது. இதில் எழுதப்படும் எதுவும் இதிலேயே இருக்க வேண்டும்’ என்ந நிபந்தனையை விதிக்கிறாள் சாரு. இதன் மூலம் அவளுடைய possessiveness குணம் தெரியவருகிறது. அவனும் விளையாட்டாக ஒப்புக் கொள்கிறான்.

“இனி உன்னுடைய முறை. நீ ஏதாவது கதை எழுத வேண்டும்” என்று அவளை திட்டமிட்ட பாதைக்கு நகர்த்தப் பார்க்கிறான். “எனக்கு எதுவும் எழுதத் தெரியாது” என்கிறாள் சாரு. “ஏன் உன் இளமைப் பருவ நினைவுகள், ஊர், திருவிழா என்று எவ்வளவு இருக்கும். அதை எழுது” என்கிறான் இளைஞன். “இல்லை என்னால் முடியாது” இது சாரு.

“அப்படியென்றால் பூபதிக்கு (பத்திரிகை ஆசிரியர்) நான் பதில் சொல்லியாக வேண்டும்” என்று வாய்தவறி உண்மையைக் கொட்டி விடுகிறான் அமல். அவளுடைய திறமையை ஊக்குவிப்பதில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் எழாமல் அது இயல்பாக நிகழ வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கிறார் ஆசிரியர். தன்னுடைய கணவனின் உத்தரவின் பேரில்தான் இவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் சாரு.

“நீ எழுதவில்லையெனில் நான் எழுதினதை பிரசுரத்திற்கு அனுப்பி விடுவேன்” என்று செல்லமாக மிரட்டுகிறான் அவன். “எதையாவது செய்து கொள்” என்று எரிச்சலுடன் எழுந்து போய் விடுகிறாள் சாரு.

()

சாருவின் அண்ணியிடம் தான் எழுதியதை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என விளையாட்டாக ஆலோசனை கேட்கிறான் அமல். இலக்கியத்தைப் பற்றி எதுவுமே அறிந்திராத அவளிடம் கேட்பதை, ஒருவன் தான் முடிவெடுக்க முடியாத நிலையில் நாணயத்தை சுண்டி விடுவதற்கு ஒப்பாகச் சொல்லலாம். இரண்டு பத்திரிகைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு பத்திரிகை அவ்வளவு சுலபத்தில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை பிரசுரம் செய்யாது. எனவே இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப முடிவு செய்கிறான்.

இடையில் அமலின் திருமணத்தை குறித்து உரையாடுகிறார் பத்திரிகை ஆசிரியர். தன்னுடைய விளையாட்டுப் பொம்மையை யாரோ பறித்துக் கொள்கிற உணர்வில் திகைத்துப் போகிறாள் சாரு. எதையுமே விளையாட்டாக அணுகும் அமல் இந்த திருமணப் பேச்சு உரையாடலையும் விளையாட்டாகவே அணுகுகிறான். அப்போதுதான் சாருவிற்கு புன்னகைக்கவே தோன்றுகிறது.

அமல் அனுப்பின கட்டுரை பிரசுரமாகி விடுகிறது. மிக உற்சாகமாக கத்திக் கொண்டே இந்தச் செய்தியை சாருவிடம் அறிவிக்கிறான் அவன். தன்னுடைய வேண்டுகோளை மீறி அவன் பத்திரிகைக்கு அனுப்பி, அது பிரசுரமும் ஆகி விட்டதே என்று சாருவிற்கு மிகுந்த ஆத்திர உணர்வு ஏற்படுகிறது. அமலின் மகிழ்ச்சியை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். எப்படியாவது அவனுக்கு தன்னை நிருபித்து அவனை வெல்ல வேண்டும் என்கிற வன்ம உணர்ச்சி மேலிடுகிறது. எழுதுவதின் மூலம்தான் இதை சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.

எழுத அமர்கிறாள். எதுவுமே தோன்றவில்லை. அழுகை வருகிறது. பிறகு நிதானமாக அமர்ந்து தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளை தோண்டிக் கண்டெடுக்கிறாள். ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து கடகடவென்று எழுதத் துவங்குகிறாள்.

()

இதற்குப் பிறகுதான் நான் குறிப்பிட விரும்புகிற காட்சி வருகிறது.

காமிரா வேகமாக நடந்து வரும் ஒரு பெண்ணின் (சாரு) கால்களையும் கூடவே அவள் கொண்டு வருகிற பத்திரிகையையும் காண்பிக்கிறது.

அமலின் அறைக்குள் புயல் போல் நுழைகிற சாரு, ஆத்திரத்துடனும் அவனை வென்றுவிட்ட குரூர திருப்தியுடனும் பத்திரிகையைக் கொண்டு அவன் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறாள். பின்பு பத்திரிகையை பிரித்து அவளுடைய கட்டுரையின் கீழ் பிரசுரமாகியிருக்கிற பெயரை “நன்றாக பார், திருமதி.சாருலதா” என்று காண்பிக்கிறாள். எந்தப் பத்திரிகை புதியவர்களை பிரசுரிக்காது என்று அமல் தயங்கினானோ அந்தப் பத்திரிகையில் சாருவின் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

வேகமாக அறையை விட்டு வெளியேறி அவளுடைய அண்ணி அமலுக்காக தயாரித்து வைத்திருக்கிற வெற்றிலை பீடாக்களை தூக்கி எறிந்து விட்டு (இனிமே நானே தயாரிக்கிறேன். நீ அதிகம் சுண்ணாம்பு கலந்துவிடுகிறாய்) புதிதான ஒரு பீடாவை தயாரித்து அமலின் வாயில் திணிக்கிறாள்.

அமல் திகைத்துப் போய் அமர்ந்திருக்கிறான். சாருவிற்குள் இவ்வளவு திறமையான எழுத்தாளர் இருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவேயில்லை. முன்பு இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது சாரு தான் அமர்ந்திருக்கிற ஊஞ்சலை ஆட்டி விடச் சொல்கிறாள். 'ஒரு எழுத்தாளரை இப்படி அவமானப்படுத்தலாமா?' என்று கேட்கும் அமல், பின்பு தன்னுடைய கட்டுரை பிரசுரமான போது "இனியாவது என்னிடம் மரியாதையாக நடந்து கொள்" என்று குறும்பாக அவளிடம் சொல்கிறான். இப்படியொரு திறமைசாலி என்பதை அறிந்திருந்தால், இப்படியெல்லாம் அவளிடம் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டான் அவன்.

"நீ தொடர்ந்து எழுத வேண்டும் சாரு. நிறுத்தி விடாதே" என்கிறான். சாரு அந்தப் பத்திரிகையை தூக்கி எறிகிறாள். அவளைப் பொறுத்த வரை அவனை சவாலில் வென்றதே போதுமானது. "இனிமேல் எதையும் என்னால் எழுத முடியாது" என்கிறாள். ஆனால் அமல் எதை எதையோ சொல்லிக் கொண்டு போகிறான். அதற்கு மேலும் அவளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஓடிவந்து அமலின் தோளின் மீது சாய்ந்து கொண்டு அழுகிறாள்.கண்ணீர் அவனுடைய சட்டையை நனைக்கிறது. தீவிரமான உடலுறவிற்குப் பின் ஏற்படுவதைப் போன்று நீண்ட மனக்கொந்தளிப்பிற்கு பின்பு ஏற்படுகிற ஆசுவாசம் அது.

அதுவரை சாருவை ஒரு தோழியாகவே காண்கிற அமல், இந்த நிகழ்விற்குப் பின்புதான் அவள் தன் மீது நேசம் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்கிறான். அவளுடனான உறவை ஒரு நெருடலாக அமல் உணரத் துவங்குகிற முதல் தருணம் அது.

()

நான் இப்படி விஸ்தாரமாக எழுதிக் கொண்டிருப்பதை, ரே தன்னுடைய திறமையான திரைக்கதையின் மூலம் மிக நுட்பமாகவும் பூடகமாகவும் பார்வையாளர்களின் முன் வைக்கிறார்.

அமோல், சாரு இருவரும் தோட்டத்திலிருக்கும் போது, சாரு தொலைநோக்கி மூலம் சுற்றி நடப்பதை கவனிக்கிறாள். இது அவளது வழக்கமான செய்கைகளில் ஒன்று. படத்தின் ஆரம்பக் காட்சியே அவ்வாறுதான் துவங்குகிறது. சாரு வீட்டு ஜன்னல்களின் மூலம் வெளியுலக நடமாட்டத்தை மிக நிதானமாக கவனித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வருகிற கணவன் ஏதோ நூலொன்றை எடுத்துக் கொண்டு சிந்தித்தபடியே செல்கிறான். சாரு அங்கு நிற்பதே அவன் பிரக்ஞையில் இல்லை. ஒரு பெருமூச்சுடன் சாரு மறுபடியும் தன்னுடைய தொலைநோக்கிக்குத் திரும்புகிறாள்.

தோட்டத்திலும் அதே போன்று தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வீட்டில் ஒரு பெண்மணி அவளது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்தவுடன் சாருவின் ஆழமான தனிமை உணர்ச்சியும் தன்னுடைய வாழ்க்கை முழுமை பெறாமலிருக்கும் உணர்வும் வெளிப்படுகிறது. பின்பு தொலைநோக்கியை நகர்த்திக் கொண்டே வரும் போது தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அமோலின் முகத்தைக் கவனிக்கிறாள். அவன் மீதான நேசத்தின் பொறி அப்போதுதான் அவளுக்குள் உருவாகியிருப்பதை பார்வையாளன் உணர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் அவள் கட்டுரை எழுதும் காட்சியும்.

கசக்கிப் போடப்பட்ட காகித உருண்டைகளை தொடர்ந்துச் செல்கிற காமிரா, அவள் முகத்தில் நிலைத்து நிற்கிறது. (பதிவின் ஆரம்பத்தின் உள்ள பட ஸ்டில்லை கவனியுங்கள்) பின்னணியில் ரேவின் அற்புதமான இசை ஒலிக்கிறது. மெதுவாக முன்னும் பின்னும் நகர்கிற காமிரா, அவளது முகத்தின் பின்னணியில் இளமைப் பருவ நினைவுக் காட்சிகளை காட்டுகிறது. காமிரா நிற்கும் போது சாருவும் தாம் என்ன எழுதப் போகிறோம் என்கிற தீர்மானத்தை அடைகிறாள்.

()

சாருவாக மதாபி மாதவி முகர்ஜி (Madhabi Mukherjee) மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் ரேவிற்கு இவர் மீது காதல் இருந்ததாகவும் பின்பு அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கட்டுரை சொல்கிறது. உண்மைதான். மதாபி எந்தவொரு ஆணுமே விரும்பக்கூடிய பேரழகிதான். ஆனால் வெறுமனே அழகி மாத்திரமல்ல, சிறந்த நடிகையும் கூட.



அமலை அவள் பத்திரிகையால் ஓங்கி அடிக்கும் போது அவள் முகத்தில் வெளிப்படுத்துகிற உணர்வுகளை என்னுடைய எளிமையான வார்த்தைகளின் மூலம் விவரிக்கவே முடியாது. பார்த்து உணர வேண்டிய காட்சியது. அப்படியொரு ஆழமான முக பாவ வெளிப்பாட்டை இதுவரை நான் எந்தவொரு திரைப்படத்திலும் கண்டதேயில்லை.

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருந்தாலும், வாசிக்கிற நீங்கள் சரியாக புரிந்து கொள்கிற படி எழுதிக் கொண்டிருக்கிறேனா என்கிற குழப்ப உணர்வு எழுதும் போது ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.சில விஷயங்களை எழுத்தின் மூலமாக சொல்லி விடவே முடியாது. 'நான் சாப்பிட்ட இனிப்பு நன்றாக இருந்தது' என்பதை எப்படி மற்றவருக்கு உணர வைக்க முடியும்? அவரும் அந்த இனிப்பை ருசிப்பதுதான் ஒரே வழி.

'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தை காணும் சந்தர்ப்பம் ஏற்படாதவர்கள், தங்களின் வாழ்க்கையில் முழுமை பெறாதவர்கள்' என்று சுஜாதா ஒரு முறை எழுதிய ஞாபகம். நான் அதனுடன் 'சாருலதா'வையும் இணைக்க விரும்புகிறேன்.

image courtesy: wikipedia & satyagitray.org

suresh kannan